ஞாயிறு, 17 அக்டோபர், 2021

வங்கிப் பணிக்காக காத்திருக்கும் பார்வையற்ற பட்டதாரிகளுக்கு அறிய வாய்ப்பு!

வேலைவாய்ப்பு அறிவிப்பு


வங்கிப் பணிக்காக காத்திருக்கும் பார்வையற்ற பட்டதாரிகளுக்கு அறிய வாய்ப்பு.

IBPS (Institute of Banking Personnel Selection) தேசியமயமாக்கப்பட்ட பொதுத்துறை வங்கிகளில் க்லார்க் பணிக்கான தேர்வினை அறிவித்துள்ளது.

இதில் தமிழ்நாட்டில் உள்ள  பார்வையற்ற பட்டதாரிகளுக்கு 9 பணியிடங்கள்  ஒதுக்கப்பட்டுள்ளன.

இந்த ஆண்டு முதல் வங்கி க்லார்க் பணிக்கான தேர்வினை தமிழிலேயே எழுதலாம்.

பார்வையற்றோருக்கான வயது வரம்பு தளர்வு விவரம்:

பொதுப்பிரிவு 10 ஆண்டுகள்.

OBC பிரிவு 13 ஆண்டுகள்.

SC/ST பிரிவு 15 ஆண்டுகள்.

விண்ணப்பிக்க கடைசி நாள் : 27.10.2021

https://ibpsonline.ibps.in/crpcl11jun21/

பார்வையற்ற பட்டதாரி பணி நாடுனர்களுக்கு வாழ்த்துக்கள்

 

வியாழன், 28 மே, 2020

சுலுந்தி


வர சித்திரமாசம் அம்மாவாச அந்னைக்கு மாடனுக்கும் வங்காரனுக்கும் கன்னிவாடி அரண்மன எல்லையில மல்யுத்தம் நடக்கப்போகுதுனு கிணிங்கிட்டி அடிச்சு அறிவிக்கப்படுது. அத கேட்ட ஒருத்தன் என்னப்பா கொஞ்சம் விளக்கமாத்தான் சொல்லேனு கேட்குறான். அவனும் சரி சொல்லுறேனு கிணிங்கிட்டிய நிறுத்திட்டு, நம்ம கன்னிவாடி அரண்மன நாவிதன் ராமன். அவன் செத்து ரொம்ப வருஷமாச்சு. அவனோட மகன்தா இந்த மாடன். இவன் யாருக்கும் செரைக்க மாட்டானாம். கத்திய முகத்துக்கு நேரா செரச்சாமாதிரி காட்டிட்டு கூலிய கேக்குறானாம். என்கூட யார வேணும்னாலும் மோத வரச்சொல்லுங்க. நா அவங்கக்கிட்ட தோத்தா செரைக்கிற வேலைய நா செய்வேன் இல்லனா தோத்தவங்க செரைக்கிற தொழில செய்யனும்னு அரண்மனையார் முன்னாடியே சவால்விட்டிருக்கான். இப்படியாக சுலுந்தி கதைத் தொடங்குது. இந்த மாடன் எதுக்காக இப்படி சவால்விடுறான், இறுதியில மல்யுத்தத்துல ஜெயிக்கப்போவது யாரு, நடந்தது என்ன ங்குறத  சொல்லி கதை முடியுது.
இந்த நாவலுக்கு பெயராக அமைந்திருக்குற சுலுந்திங்குற சொல் நாவலோட முக்கியத்துவத்த சொல்லக்கூடியதா இருக்கு. சுலுந்திங்குற குச்சில தீய கொளுத்துனா அனையாம நின்னு எரியும். அதுனால அந்த காலத்துல அடுப்பு கொளுத்துரதுல இருந்து கொல்லி வக்கிற வரைக்கும் இத பயன்படுத்தி வந்திருக்காங்க. அதுமட்டுமில்லாம நிலத்துல பள்ளமெடுப்பதுல இருந்து போராயுதம்குற வர எல்லா நிலையிலும் இந்த சுலுந்தி குச்சிய பயன்படுத்தி இருக்காங்க. இந்த குச்சிய போலவே அந்த காலத்துல நாவிதர்கள் பல நிலையில பல்வேறு காரணங்களுக்காக பல வகையில பயன்படுத்தப்பட்டிருக்காங்கங்குறது இந்த நாவல் மூலமா தெரிய வருது. நாவிதர்கள் சவரம் செய்வதற்கு மட்டுமில்லாம, பண்டுவம் பார்ப்பது முதல் அரண்மனைக்கு எதிரானவங்கள பழித்தீர்ப்பது வரைனு எல்லா நிலையிலும் பயன்படுத்தப்பட்டிருக்காங்க.
இந்த நாவலுல மாடனோட அப்பா ராமன் அரண்மன நாவிதனா இருக்கான். அவன் மிகப்பெரிய பண்டுவனா இருந்தான். அவன் குதிரை ஏற்றம், மல்யுத்தம், வேட்டையாடுதல், சமயல் என பல்துறை வித்தகனாக இருக்கான். இப்படி பல வித்தைகள கத்துருக்க ராமன் எப்படி நடத்தப்படுறாங்குறத ஆசிரியர் தெளிவா எடுத்துரச்சிருக்காறு. சித்தர வணங்கி பண்டுவம் கத்துக்கிட்ட ராமன் பேயுமில்ல பூதமுமில்லங்குற கருத்த சொல்லுறதா பதிவு செஞ்சி மூட நம்பிக்கைக்கு முற்றுப்புள்ளி வச்சிருக்காறு. இந்த நாவலுல வரலாற்று செய்திகளுக்கும், மருத்துவ குறிப்புகளுக்கும், சொலவடைகளுக்கும் பஞ்சமே இல்ல. எல்லா நாவலபோல போகுற போக்குல படிச்சிட முடியாது. நா படிக்க தொடங்கும்போது ரொம்ப சுனக்கமா இருந்துச்சு. படிக்க படிக்க ஆசிரியரோட நடை, கதையோட ஓட்டம், செய்திகள் என எல்லாத்தயும் உள்வாங்க வாசிப்பு சூடுப்பிடிச்சுது. அதுநாள இத யாரும் ஒரு பொழுது போக்கு நாவலா நினச்சிட வேண்டாம். பல்துறை செய்திகள் இதுல கொட்டிக்கிடக்கு. நிச்சயமா ஆசிரியர் இதுக்காக பல ஆண்டுகள் உழச்சிருக்கனும். இத ஒரு சித்த மருத்துவ நூலுனு சொன்னா மிகையாகாது. இறுதியா இந்த நாவலுல இருந்து ஒரு விஷயத்த சொல்லி முடிச்சுடுறேன்.
பண்டுவனான நாவிதன் ராமன் தன்னோட வீட்டுல நெருப்புமூட்டி மருந்து தயாரிக்கிறான். திடீருனு மருந்துப் பொருட்கள் கவிழ்ந்து விழுந்து கலந்து நெடியேறி தீப்பிடிச்சுடுது. இதுல அரண்மனை நாவிதன் ராமன் இறந்துடுறான். ராமனோட மனைவியும் அரண்மனை மருத்துவச்சியுமான வல்லத்தாரைக்கு கண் தெரியாம போயிடுது.
·         கண் தெரியாத வல்லத்தாரை நிதானத்துலயே சமயல் செய்யுறா.
·         மன உளைச்சலால செய்வதறியாது யாசகம் கேட்டு வயித்த கழுவிக்கிறா.
·         மாடனுக்கும் வங்காரனுக்கும் மல்யுத்தம்னு கேள்விப்பட்டு சனங்க  போகுற திசை நோக்கி குரல் கேட்டு ஓடி விழுந்து எழுந்து முட்டி மோதி இடத்த அடையுறா.
·         மல்யுத்த இறுதியில செத்தான் மாடன் என்ற சனங்களோட குரல் கேட்டு கதறி அழுது சத்தமில்லாம கிடக்குற மகன தேடி அலையுறா. அப்ப மாடன்கிட்ட வளர்ந்த நாயி அவளோட சேலைய கவ்வி இழுத்துக்கிட்டுபோயி மாடன் கிட்ட விடுது.
·         கண் தெரியாத வல்லத்தாரை வழிகாட்டுதல் இல்லாம தன்னந்தனியா பழக்கத்துனால பாக்குறவங்க திகைத்து போறமாரி வேகவேகமா அரண்மனைய நோக்கி விரைந்து நடந்து போறா.
இப்படி கண் தெரியாத வல்லத்தாரய நாவலுல படைச்சிருக்க ஆசிரியருக்கு பாராட்டுக்கள். கண் தெரியல நாளும் புத்தியும் உணர்ச்சியும் மத்தவங்கள போலத்தானு பதிவு செஞ்சிருக்காறு. கண் தெரியலனாலும் சமைக்க முடியும். பார்வையற்றவங்க அடி எண்ணி நடப்பதா பலரும் நினைச்சிருக்குற நேரத்துல அவங்க பழக்கத்தால இயல்பாகத்தான் நடக்குறாங்கங்குறது பதிவு செய்யப்பட்டிருக்கு. வல்லத்தாரய நாய் கூட்டிக்கிட்டு போய் விடுதுங்குற சூழல் மேலை நாட்டுல பார்வையற்றோருக்கு வழிகாட்ட நாய்கள் பயன்படுத்தப்படுவத நினைவூட்டுது.
இப்படியாக பலதரப்பட்ட சிந்தனைகளையும், தரவுகளையும் தன்னகத்தே வைத்துள்ள சுலுந்தி ஒரு நாவலல்ல. இது ஒரு ஆய்வு புத்தகம். இத்தகய புத்தகத்தை படைத்து பல அறிய தகவல்களைச் சமுதாயத்திற்கு அறியத்தந்த ஆசிரியர் முத்துநாகு ஐயா அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகளும் பாராட்டுக்களும்.
நன்றி.

ஐயையோ நான் குருடாயிட்டேன்!


நா இப்ப படிச்சி முடிச்ச புத்தகத்தைப் பத்தி எல்லாருக்கிட்டையும் சொல்லிடனும்னு மனசு துடிச்சிது. அதுனாலதான் இதை எழுதுறேன். கொஞ்ச நாளுக்கு முன்னாடி வீரயுக நாயகன் வேள்பாரி என்ற நாவலைப் படிச்சிட்டிருந்தேன். இல்ல இல்ல அந்த நாவலில் மூழ்கிட்டிருந்தேனுனுதான் சொல்லனும். அந்த நேரத்துலதான் பேராசிரியர் முனைவர் சிவராமன் ஐயா தொலைப் பேசியில அழைச்சாரு. சொல்லுங்க சார் எப்படி இருக்கிங்கனு கேட்டுட்டு உடனே வேள்பாரி நூல் பத்தி மகிழ்ச்சியோட சொல்ல தொடங்கிட்டேன். நானும் அந்த நாவல் பத்தி கேள்விப்பட்டேன் இப்ப படிச்சிக்கிட்டிருக்கிறத முடிச்சிட்டு அத படிக்கனும்னு சொன்னார். சரி சார், நீங்க இப்ப என்ன புத்தகம் படிக்கிறிங்கனு கேட்டேன். நா இப்ப ப்லைன்ட்நஸ் என்ற ஆங்கில நாவலைப்படிச்சு முடிச்சிட்டு அதே ஆசிரியர் எழுதிய சீயிங் என்ற நாவலைப்  படிச்சிக்கிட்டிருக்கேன்.  போர்த்துக்கீசியத்துல இருந்து மொழிப்பெயர்க்கப்பட்டது. இந்த ரெண்டு நாவலும்  ரொம்ப சுவாரசியமா இருக்குப்பா. அப்படியா சார், ப்லைன்ட்நஸ் நாவல்னா அது பார்வைத்தெரியாதவங்கள பத்தி பேசுதா சார்? அட ஆமாம்பா இந்த நாவல் தொடக்கத்துல கார் ஓட்டிக்கிட்டு வந்த ஒருத்தன் சிக்னல்ல நிக்கும்போது கண்ணுத் தெரியாம போயிட்றான். அவனுக்கு உதவ ஒருவன் வந்து அவன அவன் வீட்டுல கொண்டுபோய் விட்டுட்டு, திரும்பும்போது அவன் கார ஆட்டயப் போட்டுட்டு போறான். அவனுக்கும் கண்ணு தெரியாம போயிடுது. முதல்ல கண்ணுத் தெரியாம போனவ டாக்டர்கிட்ட போறான். தொடர்ச்சியா டாக்டருக்கும் கண்ணுத் தெரியாம போயிடுது. ஐயையோ! என்ன சார் இது அப்ப மொத்தமா எல்லாருக்கும் கண்ணுத் தெரியாம போயிடுமா சார். அப்படித்தான் கத போகுது. இந்த கத இப்ப கொரோனா சூழலுக்கு பொருத்தமான கதையா இருக்கு. நிச்சயமா நாம இத சிந்திக்கனும். அந்தகக்கவிப் பேரவையில நா இந்த நூல அறிமுகப்படுத்துறேன் எல்லாருக்கும் இது தெரியனும். நிச்சயமா சார். இந்த கூட்டம் முடிஞ்சிடட்டும் அடுத்தக் கூட்டத்துல நீங்க இந்த புத்தகத்தை எங்களுக்கு அறிமுகப்படுத்தனும்னு கேட்டுக்கிட்டேன். சரிப்பா நிச்சயமாக பண்ணிடலாம்.
அவர்க்கிட்ட பேசி முடிச்ச சில நாட்களுல விரல்மொழியர் மின்னிதழின் வாட்ஸப் குழுமத்துல பாரதி புத்தகாலயம் வெளியிட்ட பார்வை தொலைத்தவர்கள் என்ற புத்தகம் குறித்த செய்திய யாரோ பதிவிட்டிருந்தாங்க. அடடா ப்லைன்ட்நஸ் புத்தகம் பார்வை தொலைத்தவர்கள் என்ற தமிழ் மொழிபெயர்ப்பு புத்தகம் இருக்குனு அறிஞ்சதும் மனசு நிஜமாகவே மகிழ்ச்சியா இருந்துச்சு. அந்த புத்தகத்த ஒரு நண்பர்க்கிட்ட கேட்டேன் அவரும் உடனே குடுத்தார். படிக்க ஆரம்பிச்சேன்.
பார்வை தொலைத்தவர்கள் யோசே சரமாகோ என்ற போர்த்துகீசிய நாவலை ப்லைன்ட்நஸ் என்ற ஆங்கில மொழிப்பெயர்ப்பில் இருந்து சங்கரநாராயணன் என்பவர் தமிழில மொழிப்பெயர்த்திருக்காறுனு தெரிஞ்சிக்க முடிஞ்சுது. அதுமட்டுமில்லாம 1998ஆவது வருஷம் இதுக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசும் குடுத்துருக்காங்கனு தெரிஞ்சிது. கதைய சிவராமன் சார் ஏற்கனவே ஓரளவு சொல்லி இருந்ததால நா சில எதிர்பார்ப்போடு கதைய படிக்க ஆரம்பிச்சேன். ஆனா நா யூகிச்சமாரி அந்த கத போகல. பலவித சூச்சுமங்கள அது சொல்லி போனுச்சு. குருடு என்ற தொத்து நோய் பரவத்தொடங்குது. அது மிகத்தீவிரமா பரவுது. நோய் குறித்து தொடக்க நிலயிலயே அறிந்த அரசு குருடான நோயாலிகளைத் தனிமைப்படுத்த திட்டமிடுது. தீவிர ஆலோசனைக்கு அப்பரம் தனிமைப்படுத்த நீண்டநாள் பயன்பாட்டுல இல்லாத ஒரு பைத்தியக்கார ஆஸ்பத்திரிய தேர்ந்தெடுத்து அதுல நோயாலிகள தனிமைப்படுத்துது. நோய் தொத்து இருக்கும்னு கண்டறியப்பட்ட அறிகுறிக்காரங்களையும் அங்கயே வேர வார்டுல தனிமைப்படுத்துது. குருடானவங்க கண்களுக்கு எல்லாமே ஒரு வெண்மைப் படலமா தெரியுது. அதுனால அந்த நோயிக்கு வெண்மை நோயினு பெயரிடப்படுது. தனிமைப் படுத்தப்பட்ட பைத்தியக்கார ஆஸ்பத்திரி பாதுகாப்புக்கு ராணுவத்த நியமிக்கிது. ஆஸ்பத்திரிக்குள்ள இருந்து யாராவது வெளிய வந்தா சுட்டுப்போட உத்தரவு கொடுக்கப்படுது. உணவு கொடுக்க உத்தரவு கொடுக்கப்படுது. நாளடைவுள உணவு போதுமான அளவு இல்ல. குறிப்பிட்ட நாளுக்கு அப்புரம் உணவு வருவதே நின்னுப்போயிடுது. உள்ள பயன்படுத்தி குப்பையான பொருள்கள உள்ளயே கொளுத்திடனும்னு உத்தரவு கொடுக்கப்படுது. யாராவது செத்துப்போனா உள்ளயே புதைச்சிடனும்னு சொல்லப்படுது. இந்த உத்தரவுகளெல்லாம் ஒவ்வொரு நாளும் நினைவூட்டப்படுது. இதெல்லாம் வெண்மை நோயால பாதிக்கப்பட்டு திடீரென குருடான கூட்டம் செய்ய வேண்டியிருக்குங்குறத நினச்சிக்கூட பாக்க முடியாது.
அந்த ஆஸ்பத்திரி நீண்டநாலா பயன்படுத்தப்படாததுநாள எந்த அடிப்படை வசதியும் சரியா இல்ல. உள்ள வந்து யாரும் சரிசெய்து தரவும் வாய்ப்பு இல்ல. இப்படியாக கதை நகருது. தனிமைப் படுத்தப்படும் குருடான நோயாளிகளோட எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகமாகுது. ஆஸ்பத்திரியே போதும்போதுனு அலருர அளவுக்கு நோயாளிகள் வந்து சேந்தாங்க. அந்த ஆஸ்பத்திரி குருடான மனிதர்களைவிட மனித கழிவுகளாலையும், துர்நாற்றத்தாலையும் நிறஞ்சி இருந்துதுனு சொல்லலாம். இந்த கதையோட இறுதியில நாட்டிலுள்ள எள்ளாருக்கும் கண் தெரியாம போயிடும். இறுதி அத்யாயங்களுல இந்த நோய் தானாக சரியாகி கண் தெரிஞ்சிடும். நாடே குருடான நிலையில நோய் தொற்றால பாதிக்கப்பட்ட ஒரு கண் டாக்டரின் மனைவி மட்டும் குருடாக மாட்டாங்க.
வெண்மை நோயால தாக்கப்பட்டு புதிதாக குருடான குருட்டுக் கூட்டம் எப்படி வாழ்க்கைய எதிர்கொள்ளுது, குருட்டுக்கூட்டத்தில் தோன்றிய திருட்டுக்குருட்டுக் கூட்டத்திலிருந்து தங்கள காத்துக்க எப்படி போராடுது, உணவுக்காக, நீருக்காக எப்படியெல்லாம் அலஞ்சு திரிய வேண்டியிருக்கு உள்ளிட்ட நிறைய பிரச்சனைகளை கதை சொல்லி போகுது. குருடனே குருடனுக்கு ஆப்பு வைக்கிறான், குருட்டு கம்னாட்டி கம்யுனிட்டி என்ற தொடர்களை கதைக்கு இடையில பாக்கும்போது எனக்கு கொஞ்சம் மனசு வலிக்கதான் செஞ்சுது. சில சூழ்நிலைகள் ரசிக்கத்தக்கதாகவும் இருந்துச்சு. இந்த நாவலுல பல இடங்கள படிக்கும்போது மனசுக்குள்ள ஏதோ கடபாறைய வச்சு இடிக்கிறாமாதிரி வலி ஏற்பட்டுச்சு. நா முன்னாடியே படிச்சிருந்த வீரயுக நாயகன் வேள்பாரியும், இப்போது படிச்சு முடிச்சிருக்குற பார்வை தொலைத்தவர்கள் என்ற இந்த நாவலும் ஏதோ ஒரு கோட்டில் பயணித்து ஏறக்குறைய ஒத்துப்போகுறமாதிரி ஒரு கொள்கைய வலியுறுத்துவதாக உணருறேன். எல்லோரும் இந்த நூலை அவசியம் படிக்கனும்னு கேட்டுக்குறேன். இதுல ஏதாச்சும் பிழை இருந்துச்சுனா பொருத்துக்குங்க. படிச்சத பகிர்ந்துக்கனும்னு தோனுச்சு அதுனால உடனே எழுதிட்டேன்.
யோசே சரமாகோ எழுதிய ப்லைன்ட்நஸ் உள்ளிட்ட நான்கு நாவல்களைப் படித்து முடித்துள்ள பேராசிரியர் சிவராமன் சார் 27 மே 2020 அன்று புதிய பனுவல் ஆய்வு வட்டம் ஜூம் அரங்கில் அது குறித்து கட்டுரைப் படிக்கிறார். கூட்டத்தில் பங்கேற்று கலந்துரையாடுவோம்.
நன்றி.

புதன், 15 ஏப்ரல், 2020

விந்தையாளன் வேள்பாரி!


வீரயுக நாயகன் வேள்பாரி

கொரோனா ஊரடங்கு உத்தரவைத் தொடர்ந்து செல்பேசி, கணினி என பொழுதுகள் கழிந்தன. வாசிப்பு மிக பிடித்திருந்தாலும் எதை வாசிப்பது, நாவல்களை வாசித்தால் முழுமையாக வாசித்து முடித்துவிட முடியுமா என்ற கேள்விகள் எழுந்தவண்ணம் இருந்தன. ஏறக்குறைய பத்து பதினைந்து நாட்களுக்கு முன்பு வாசிப்பை நேசித்து எப்பொழுதும் ஏதேனும் ஒரு புத்தகத்தைப் படித்து அதன் சுவையை நண்பர்களுக்கு எடுத்து சொல்லும் நண்பர் தமிழ் பட்டதாரி ஆசிரியர் ராமன் அவர்களோடு செல்பேசியில் பேசிக்கொண்டிருக்கும் போது வேள்பாரி குறித்தும், கடந்த இரண்டு ஆண்டுகளில் புத்தகக்காட்சியில் அதன் விற்பணைக் குறித்தும்,  இலக்கிய ஆர்வலர்கள், தமிழ் ஆய்வாளர்கள், பேச்சாளர்கள், பல்துறை அறிஞர் பெருமக்கள் என அனைவரும் இன்நூலின் பெருமையை வியந்து புகழ்ந்து வரும் விதம் போன்றவற்றை மிகுந்த ஆர்வத்துடன் எடுத்துரைத்தார். இப்படிப்பட்ட நூலினை நான் கேள்விப்பட்டேனா அல்லது கேட்டிருந்தும் கடந்து சென்றேனா என்று தெரியவில்லை. உடனே அந்த நூலினை அவரிடமிருந்து வாங்கினேன். படிக்க தொடங்கிய உடனேயே வரிகள் அதற்குள்ளே பயணிக்க இழுத்து சென்றது. படிக்க படிக்க அதிசயம் ஆச்சரியம் என்று உள்ளத்தின் வார்த்தைகள் மேல் எழுந்தது. காலை, மாலை, இரவு என வாசிப்பு தொடர்ந்து கொண்டே இருந்தது. உணவு உண்ணும் பொழுதுகள் கூட கனவு போல் கடந்து சென்றது. கனவிலும் வேள்பாரி நினைவென மலர்ந்தது. வாசித்த வரிகளும் வார்த்தைகளும் உயிர்பெற்று பல பொருள்கள் தந்து சென்றன. சற்றே அசந்தால் தொடர் பிடிபடவில்லை. பொருளறிய மீண்டும் பின்னோக்கி வரிகளுக்குள் வா என்று அழைத்தன தொடர்கள். படித்தேன், திகைத்தேன், சிரித்தேன், அழுதேன், வியந்தேன், நிறைந்தேன் மலைத்தேன், குடித்தேன் திகட்டவில்லை. அப்பப்பா! வீரயுக நாயகன் வேள்பாரியை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை.
பாரி என்பவனை வள்ளலாகவும், கபிலரின் நண்பனாகவும் மட்டுமே அறிந்த தமிழ்ச் சமூகத்திற்கு பல்துறை வித்தகனாக படம்பிடித்துக் காட்டுகிறார் நூலின் ஆசிரியர். பரம்புநாடும் பச்சைமலையும் அதனைச் சுற்றியுள்ள குன்றுகளும், ஊர்களும் இயற்கை வளங்களும் பல செய்தியைச் சொல்லி செல்கின்றன. அறிவுகளைப் பகுத்த தொல்காப்பியர் பச்சைமலைத் தொடரைத் தொடர்ந்து ஆய்ந்து இயற்றியதுவோ ஒற்றறிவதுவே என்று எண்ணத்தோன்றுகிறது. சங்க இலக்கியத்தின் சாறு பிழிந்து பருக பணித்திருக்கிறார் படைப்பாளர். கதையின் தொடக்கத்தில் இருந்து பாரி வருவான் என்று சொல்லி அழைத்து செல்லும் ஆசிரியர் பாரியின் வரவிற்கு பிறகு பரம்பின் குரல் ஒலிக்கும் என்று சொல்லி முன்னோக்கி அழைத்து செல்கிறார். கதைகளில் வரும் நத்தை உள்ளிட்ட பூச்சிகள், பாம்பு வகைகள், ஆட்கொல்லி மரம், மங்கையர் மணம் முகர்ந்து மலரும் மரம் உள்ளிட்ட மரங்கள்,  இராவெரிச்செடி, காக்கா விரிச்சி போன்ற பறவைகள், விருந்தாகும் அறுவதாங்கோழி உள்ளிட்ட உயிரிணங்கள், தேவ வாக்கு சொல்லும் விலங்கு உள்ளிட்ட விலங்குகள், திரையர்கள், காடர்கள் உள்ளிட்ட வலிமை மிக்க மணிதர்கள், மூலிகைகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட போர்வை, மூலிகைகளைக் கொண்டு வடிவமைக்கப்பட்ட வீரர்களுக்கான கவசங்கள், பூச்சிகளையும், யானைகளையும், காற்றையும் காற்றியையும் போருக்கு பயன்படுத்திய விதம், எரியும் பச்சைச் செடி, அடைமழையிலும் அனையாத தீப்பந்தங்கள், பழையன், வாரிக்கையன், தேக்கன் போன்ற வயது மூத்தவர்களின் செயல்பாடுகள், வானை மிஞ்சும் அறிவைக் கொண்ட பேராசான் திசைவேலர், பெரும்புலவர் கபிலர், முருகன் வள்ளி காதல், ஆதினி, மயிலா, அங்கவை, பொற்சுவை போன்ற பெண்களின் அறிவுக்கூர்மை, நீலன், இறவாதான் உள்ளிட்ட வீரர்களின் துடிப்பு, தளபதிகளின் தந்திரம், அமைச்சர்களின் செருக்கு, மூவேந்தர்களின் சூழ்ச்சி, பாரியின் மாட்சி என அத்தனையும் வியக்க வைக்கிறது. இந்த நூலினைப் படிக்கும் போது கதைகளினூடே வந்த இறைவழிபாடு சித்திரைத் திருநாளில் எங்கள் குலதெய்வ வழிபாட்டை நினைவுப் படுத்தி சென்றது. ஈடு இணை இல்லா இந்நூல் அனைவராலும் படிக்கப்பட வேண்டிய இயற்கையின் இரகசியம்.
இதனை எழுதிய சு.வெங்கடேசன் ஐயா அவர்கள் பல மணி நேர தூக்கத்தைத் துரந்து, நூற்றுக்கணக்கான நூல்களைப் படித்து, ஆயிரக்கணக்கான நாட்களைக் கடந்து உழைத்திருப்பது நூலில் புலனாகிறது. கண் பார்வையற்றோர் வாசிக்க உதவும் மென்பொருள் துணைக்கொண்டு பார்வையற்ற நான் மனதில் பல காட்சிகளை உருவகப்படுத்தி வாசிக்க ஏதுவாக இருந்தது எழுத்தாளரின் வரிகள். ஓவியர் ம.செ அவர்களின் ஓவியம் கதைகளின் நகர்வை எத்தனைச் சிறப்பாக காட்சிப் படுத்தியிருக்கும் என்பதை ஊகிக்க முடிகிறது.
நூலினைப் படித்துக் கொண்டிருக்கும்போது செல்பேசி மூலமாக பேசிய முருகேசன் ஐயா அவர்கள் படியுங்கள் உங்களுக்கு மெய்சிலிர்ப்புகளும், வியப்புகளும் காத்திருக்கிறது என்று மேலும் ஆர்வத்தைத் தூண்டினார். தமிழ் முனைவர் பட்ட ஆய்வாளர்கள் தம்பி தங்கை லட்சுமிநாராயணன் வத்சலா நாங்கள் படிக்க தொடங்கிவிட்டோம் மிக அருமையாக இருக்கிறது நீங்கள் படியுங்கள் என்று மேலும் ஆர்வத்தைத் தூண்டினர். அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியினை உரித்தாக்குகிறேன். இந்த நூலினை வாசிக்க வழங்கிய ராமன் ஐயா அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியினை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன்.
அனைவரும் விரைந்து படியுங்கள் பல விந்தைகளை உணருங்கள்.
நன்றி.

திங்கள், 24 ஜூன், 2019

முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் (PGTRB) பணி இடங்களில் பார்வையற்றோர் மற்றும் குறைப் பார்வையுடையோருக்கான ஒரு சதவிகித இட ஒதுக்கீட்டு (a) Blindness and Low vision – 1% Reservation விவரம்


முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பணி இடங்களில் பார்வையற்றோர் மற்றும் குறைப் பார்வையுடையோருக்கான ஒரு சதவிகித இட ஒதுக்கீட்டு (a) Blindness and Low vision – 1% Reservation விவரம்


முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பணி இடங்களில் பார்வையற்றோருக்கு எந்தெந்த பாடங்களில் எவ்வளவு பணி இடங்கள் உள்ளன என்பதை அறிந்துக்கொள்ள வேண்டியது அவசியமாகிறது. ஆசிரியர் தேர்வு வாரியத்தால் வெளியிடப்பட்டுள்ள  அறிவிப்பின்படி, நமக்கான பணி இடங்கள் குறித்த எனது புரிதலில் பணி இடங்களைப் பட்டியலிட்டுள்ளேன். பிழைகள் இருப்பின் சுட்டுங்கள் அறிந்துக்கொள்ள ஆர்வமுடன் இருக்கிறேன்.

பின்னடைவு காலி பணி இடங்கள் 336.


பார்வையற்றோர் மற்றும் குறைப் பார்வையுடையோருக்கான பின்னடைவு காலி பணி இடங்கள் 10.

விவரம் பின்வருமாறு.

Gt  தமிழ் 3.

Gt ஆங்கிலம் 2.

Gt பொருளியல் 5.

தற்போதய பணி இடங்களில் ஊனமுற்றோருக்கான பணி இடங்கள் 134.


பார்வையற்றோர் மற்றும் குறைப் பார்வையுடையோருக்கான பணி இடங்கள் 35.

விவரம் பின்வருமாறு.

பாடவாரியாக மொத்த பணி இடமும், பார்வையற்றோருக்கான பணி இடமும் தலைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து குறிப்பிட்ட பாடத்தில் எந்த பிரிவினருக்கு எத்தனை பணி இடங்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ்   245. -  5.


Gtw 1.

Bc 1.

Mbc /dnc 1.

Sc 1.

St 1.

ஆங்கிலம் 206 -  4.


Gt 1.

Bcw 2.

Mbc/dnc 1.

கணிதம் 266 3.


Gt 1.

Bcw 1.

Mbc/dnc 1.

இயற்பியல் 190 -  4.


Bcw 1.

Bc 1.

Sc 1.

Scw 1.

வேதியியல். 215 4.


Bcw 1.

Bc 1.

Sc 1.

Scw 1.

தாவரவியல் 142 2.


Bc 1.

Mbc/dnc w 1.

விலங்கியல் 135 2.


Bc 1.

Mbc/dnc w 1.

வரலாறு 51 2.


Bc 1.

Mbc/dnc w 1.

பொருளியல் 98 4.


Gt 1.

Bc 2.

Scw 1.

வணிகவியல் 83 4.


Gt 1.

Bc 1.

Sc 1.

Scw 1.

உடற்கல்வி 14 1.


Mbc/dnc 1.

மொத்தம் 35


மேலே குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களில் ஏதேனும் பிழை இருப்பின் பொருத்தருள வேண்டுகிறேன். ஆசிரியர் தேர்வு வாரியத்தால் வெளியிடப்பட்டிருக்கும் அறிவிப்பில், நான்கு சதவிகித இட ஒதுக்கீடு மற்றும் அடையாளம் காணப்பட்ட பணி இடங்கள் போன்றவற்றை பின்பற்றி இருப்பதை அறிய முடிகிறது. அதே நேரத்தில் இட ஒதுக்கீடு மற்றும் அடையாளம் காணப்பட்ட பணி இடங்கள் முறையாக கையாளப்பட்டுள்ளதா என்பதை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டியது நம் அமைப்புகளின் கடமை.

நன்றி.

 

வெள்ளி, 22 மார்ச், 2019

பார்வையற்றோருக்கான ஐந்து நாள் கணினி பயிலரங்கம் மே 2019


பார்வையற்றோருக்கான ஐந்து நாள் கணினி பயிலரங்கம்

22/05/2019 – 26/05/2019
அறிவிப்பை முழுமையாக படித்தபின் பதிவு செய்யும்படி பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
முதலில் பதிவு செய்யும் 50 பங்கேற்பாளர்கள் மட்டுமே பங்கேற்க இயலும்.
பதிவு செய்ய கடைசி நாள்: 05/05/2019.
அன்புடையீர்,
அரிமா சங்கங்கள் மற்றும்  ப்ரேரனா ஹெல்ப் லைன் ஃபௌன்டேஷன் பார்வையற்றோர் நலனில் ஈடுபாடுடைய சிறந்த கல்வி நிறுவனத்தோடு இணைந்து நடத்தும், பார்வையற்றோருக்கான ஐந்து நாள் கணினிப் பயிலரங்கம் 22/05/2019 புதன் முதல் 26/05/2019 ஞாயிறு வரை நடைபெற உள்ளது. தங்குமிடம் உணவு உள்ளிட்ட  அடிப்படை வசதிகள் செய்துத்தரப்படும். பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் கட்டாயமாக மடிக்கணினி, சார்ஜர், இண்டர்நெட் மோடம், ஹெட்ஃபோன்  போன்றவற்றை கொண்டுவர வேண்டும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம். மேலும், தங்களது பெயர், பணி அல்லது கல்வி விவரம்,, தாங்கள் பயன்படுத்தும் திரைவாசிப்பு மென்பொருள் (NVDA Or JAWS) எது, கீழேக்  குறிப்பிடப்பட்டுள்ள பிரிவுகளில் தாங்கள் எந்த பிரிவில் பயிற்சி பெற விரும்புகிறீர்கள் உள்ளிட்ட அடிப்படைத் தகவல்களை வரும் 05/05/2019 ஞாயிற்றுக் கிழமைக்குள் திரு. ராமராஜ் அவர்களிடம்  தெரிவித்து, பதிவுக் கட்டணம் ரூபாய் 200  செலுத்தி  தங்கள் வரவை உறுதி செய்துக்கொள்ளும்படிக் கேட்டுக்கொள்கிறோம்.  முதலில் பதிவு செய்யும் 50  நபர்கள் மட்டுமே பங்கேற்க இயலும். எனவே தயவுக்கூர்ந்து தாங்கள் பங்கேற்க இயலுமா என்பதை உறுதி செய்தபிறகு பதிவு செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம்.

பிரிவுகள்

1.கணினி அறிமுகம், தட்டச்சு உள்ளிட்ட அடிப்படைப்  பயிற்சி, மைக்ரோசாஃப்ட் வேட் மற்றும் இணையம் அறிமுகம்.
2.பயன்பாட்டு நோக்கில் மைக்ரோசாஃப்ட் வேட், மைக்ரோசாஃப்ட் எக்சல்  மற்றும் இணையம்.
3கூடுதல் பயன்பாட்டாளர்களுக்கான பிரிவு.
1.கணினி மேலான்மை.
2.மென்பொருள் நிறுவுதல் நீக்குதல் மற்றும் இயக்குதளம் (OS) நிறுவுதல்.
3.கொக்கோஃபிக்ஸ் லினக்ஸ் பயன்பாடு அறிமுகம்.
4.ஆடியோ எடிட்டிங்.
5.வீடியோ எடிட்டிங் அறிமுகம்.
6.தமிழ் மற்றும் ஆங்கில ஒளிவழி எழுத்துணரி (OCR).
7.HTML உருவாக்குதல்.
8.சொந்தமாக வலைப்பக்கம் உருவாக்குதல்.
9.கூகுல் விண்ணப்பம் மற்றும் வினா நிரல் உருவாக்குதல்.
10.ஆண்டிராய்டு குறுஞ்செயலி உருவாக்குதல் அறிமுகம்.
11.ஆன்லைன் சேவைகளைப் பயன்படுத்துதல்.

அனைத்து பிரிவினருக்கும் ஆண்டிராய்டு பயன்பாடு தேவைக்கேற்ப இடையிடையே பயிற்றுவிக்கப்படும்.

வகுப்பு நடைபெறும் முறை

·         குறிப்பிடப்பட்டுள்ள ஒவ்வொரு பிரிவினருக்கும் தனி வகுப்பறைகள் ஏற்படுத்தப்படும்.
·         பிரிவு மூன்று தவிற மற்ற பிரிவினருக்கு தனித்தனி பயிற்றுநர்கள் அமர்த்தப்படுவர்.
·         தேவைப்பட்டால் தலைப்பிற்கேற்ப பொது வகுப்புகள் ஏற்படுத்தப்படும்.
·         வகுப்புகள் காலை 09.00 மணி முதல் 01.00 மணி வரையிலும் மீண்டும் 03.00 மணி முதல் 06.30 மணி வரையிலும் நடைபெறும்.
·         கோடைக்காலம் என்பதால் உணவு இடை வேளைக்கு பிறகு ஓய்வு நேரம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
·         காலை மற்றும் மாலை வகுப்புகளுக்கிடையே தேநீர் இடை வேளை வழங்கப்படும்.

பயிற்சி விதிமுறைகள்

·         அனைவரும் கட்டாயம் மடிக்கணினி சார்ஜர், ஹெட்போன், இண்டர்நெட் மோடம் கொண்டுவர  வேண்டும்.
·         ஏற்கனவே பங்கேற்றவர்கள் அதே பிரிவில் பங்கேற்க அனுமதிக்கப்படமாட்டார்கள்.
·         கடந்த ஆண்டுகளில் நடைபெற்ற பயிலரங்கங்களில் பங்கேற்றவர்கள் தங்களை மேம்படுத்திக்கொள்ள அடுத்த நிலையிலான பிரிவுகளில் பங்கேற்களாம்.
·         பிரிவு 2 மற்றும் பிரிவு  3இல் கலந்துக்கொள்பவர்களுக்கு கணினியைத் திரைவாசிப்பு மென்பொருள் மூலம் நன்கு பயன்படுத்தத் தெரிந்திருக்க வேண்டும்.
·         பிரிவு மூன்றில் பங்கேற்பவர்கள் கூடுதல் பயன்பாட்டாளர்களாக கருதப்படுவர். அவர்களுக்கென்று தனி பயிற்றுநர் அமர்த்தப்படமாட்டாது. ஒவ்வொரு தலைப்பிற்கும் ஒவ்வொரு பயிற்றுநர் வந்து கருத்துக்களைப் பகிர்ந்து செல்வர்.

பதிவு செய்பவர்களின் மேலான கவனத்திற்கு

பதிவு செய்ய விருப்பம் உள்ளவர்கள் தங்களால் கலந்துக்கொள்ள இயலுமா என்பதை முடிவு செய்தபின் வரவை உறுதி செய்யும்படி பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம். கடந்த ஆண்டு பதிவு முடிந்த பிறகு பலர் கலந்துக்கொள்ள விருப்பம் தெரிவித்தனர் ஆனால் அவர்களுக்கு வாய்ப்பு வழங்க இயலவில்லை. இறுதியில் பதிவு செய்த சிலர் வரவில்லை இதனால் தேவை இல்லாத குழப்பம் ஏற்படுகிறது. எனவே வரவை உறுதி செய்துக்கொண்ட பிறகு பதிவு செய்யவும். 
பங்கேற்பவர்கள் முழுமையாக ஐந்து  நாட்களும் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம். முதல் ஒரு நாள் தாமதமாக வருவதோ, இடையில் ஒரு நாள் வெளியே செல்ல அனுமதி கேட்பதோ, இறுதியில் ஒருநாளைக்கு முன்னதாக புறப்படுவதோ அனுமதிக்கப்படமாட்டாது.  
நடைபெறும் இடம்: சென்னை. மற்ற விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும்

பதிவிற்கு தொடர்புக்கொள்ள

திரு. ராமராஜ்
7010293340
9940418957
மேலதிக விவரங்களுக்கு
திருமதி. பத்மா ஆனந்த் – 96 00 02 68 91.
திரு. ர. ராஜா – 99 40 39 38 55.
திரு. சே. பாண்டியராஜ் – 98 41 12 91 63.
நன்றி.....